Friday, September 15, 2023

முகலாயப் பேரரசு TNPSC HISTORY NOTES IN TAMIL

 முகலாயப் பேரரசு TNPSC HISTORY NOTES IN TAMIL

tnpsc history notes


முகலாயப் பேரரசு : இந்தியாவின் மீது மேற்கு, வடமேற்குத் திசைகளிலிருந்து மகா அலெக்ஸாண்டர் காலம் தொடங்கி நூற்றாண்டுகளின் ஊடாகப் பலமுறை படையெடுப்புகள் நடைபெற்றுள்ளன. வடஇந்தியாவின் பல பகுதிகள் இந்தோ- கிரேக்கர்கள், சாகர், குஷாணர், ஆப்கானியர் போன்ற அந்நியர்களால் ஆளப்பட்டுள்ளன. மங்கோலிய செங்கிஸ்கான், துருக்கிய தைமூர் ஆகியோரின் வழித்தோன்றல்களான முகலாயர் இந்தியாவில் ஒரு பேரரசை நிறுவினர். அப்பேரரசு மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தது. ஆனால் அவர்களை நாம் அந்நிய தேசங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களாகக் கருதவில்லை; மாறாக நம் நாட்டைச் சேர்ந்த அரச வம்சாவளியினராகவே கருதுகிறோம். முகலாயப் பேரரசு தொடர்பான விவரங்களை, இக்கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.... 

முகலாயப் பேரரசு அறிமுகம் | Mughal Empire Introduction

முகலாயப் பேரரசை நிறுவியவர் பாபர் இப்பேரரசு 1526இல் பானிப்பட் போரில் இப்ராகிம் லோடியை பாபர் தோற்கடித்தபின் நிறுவப்பட்டது. இவ்வாறு இந்தியாவில், ஒரு புதிய சகாப்தம், ஒரு புதிய பேரரசு தொடங்கி 1526 முதல் 1857 வரை நீடித்தது. முகலாய வம்சத்தைச் சேர்ந்த ஆறு முக்கிய அரசர்களான பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கீர், ஷாஜகான், ஔரங்கசீப் ஆகியோர் இந்திய வரலாற்றில் தங்கள் தடங்களைப் பதித்தனர். 1707இல் ஔரங்கசீப்பின் மறைவைத் தொடர்ந்து பேரரசு வீழ்ச்சியடைந்தது. என்றாலும் 1707 முதல் 1857 வரை முகலாயர் அரசு பெயரளவுக்கு ஓர் அரசாக இயங்கி வந்தது. ஒன்றரை நூற்றாண்டுக்குப் பின்னர் 1857ஆம் ஆண்டு பெரும்கிளர்ச்சிக்குப் பின் அரசியல் அதிகாரம் ஆங்கிலேய அரசியாரின் கைவசமானபோது ஆட்சி ஆங்கிலேயரின் கைகளுக்குச் சென்றது. முகலாயப் பேரரசு அதனுடைய அதிகாரத்தின் உச்சத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வங்காளம் வரையிலும், காஷ்மீர் முதல் தெற்கே தமிழகம் வரையிலும் பரந்து விரிந்திருந்தது. இந்தியா முழுவதிலும் மையப்படுத்தப்பட்ட சீரான நிர்வாக அமைப்பை முகலாயர் உருவாக்கினர். முகலாயர்கள், குறிப்பாக அக்பர், இந்துக்களையும் முஸ்லீம்களையும் ஒரே நாட்டினராக ஒருங்கிணைத்து, ஒரு கூட்டுத் தேசிய அடையாள அரசியலை உருவாக்கினார். மேலும் இந்தியாவைச் செழுமைப்படுத்திய மகத்தான கலை, கட்டடக்கலை, இலக்கிய, பாரம்பரியத்தையும் விட்டுச் சென்றனர்.

முகலாயப் பேரரசர் ஜாகிருதீன் முகமது பாபர் (1526-1530) | Mughal Emperor Zahiruddin Muhammad Babur (1526–1530)

மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் (துருக்கிய இனக்குழு); சபாவி (ஈரானை ஆட்சி செய்த அரச வம்சத்தினர்; ஷியா முஸ்லீம் பிரிவை ஆதரித்தவர்கள்); உதுமானியத் துருக்கியர் (சன்னி முஸ்லீம் பிரிவைச் சேர்ந்தவர்கள்) ஆகியோரிடையே நடைபெற்ற பாபர் மேலாதிக்கத்திற்கான போட்டி. சாமர்கண்ட் பகுதியின் அரசரான பாபரை, தனது வாழ்க்கை வளத்துக்கான வாய்ப்புகளை வேறு இடங்களில் தேடிச் செல்லக் கட்டாயப்படுத்தியது. வரலாற்று ரீதியாக மத்திய ஆசிய நாடுகள் பட்டுப்பாதை வழியாக இந்தியாவோடு செய்த வர்த்தகம் அவர் செல்ல விரும்பிய இடத்தைப் பற்றிய (இந்தியா) தேவையான தகவல்களை அவருக்கு வழங்கியது. ஒன்றேகால் நூற்றாண்டுக்கு முன்னர் தைமூர் செய்தததை மீண்டும் செய்ய வேண்டுமெனக் கனவு கண்டுகொண்டிருந்த பாபர், தில்லி சுல்தானியம் அரசியல் ரீதியாகச் சிதைவுற்றதைத் தொடர்ந்து 1526இல் தில்லியைத் தலைநகராகக் கொண்டு முகலாயப் பேரரசை நிறுவுவதில் வெற்றி பெற்றார்.

பாபர் பதினோரு வயதுச் சிறுவனாகத் தனது தந்தையிடமிருந்து சாமர்கண்டை (தற்போது உஸ்பெக்கிஸ்தானிலுள்ள ஒரு நகரம்) மரபுரிமைச் சொத்தாகப் பெற்றார். எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் அரியணையை இழந்த அவர் விரைவில் அதை மீட்டார். ஆனால் ஈரானில் வலிமைவாய்ந்த சபாவிகளின் ஆட்சி நடந்ததினாலும், மத்திய ஆசியாவில் உஸ்பெக்குகள் இருந்ததினாலும் தனக்கென ஒரு பேரரசைத் தென்கிழக்கே இந்தியாவில்தான் அமைக்க முடியுமென உணர்ந்தார். தைமூர் வம்சத்தைச் சேர்ந்தவர் ஆகையால் பஞ்சாப் மீது அவருக்கு ஒரு கண் இருந்தது. ஏனெனில் முன்பு பஞ்சாபின் ஒரு பகுதி தைமூரின் ஆளுமைக்குள் இருந்திருக்கிறது. 1519க்கும் 1524க்கும் இடையே அவர் பேரா, சியால்கோட் லாகூர் ஆகியவற்றின் மீது படையெடுத்து இந்துஸ்தானை கைப்பற்றும் உறுதியான எண்ணத்தை வெளிக்காட்டினார். இந்துஸ்தானின் அரசியல் சூழலும் அவருடைய துணிச்சலான நடவடிக்கைகளுக்குச் சாதகமாக இருந்தது. காபூல், கஜினி ஆகியவற்றை கைப்பற்றிய பாபர் சிந்து நதியைக் கடந்து ஒரு சிறிய அரசை ஏற்படுத்தினார். இந்தியாவின் மீது படையெடுப்பதற்கான காலமும் கனிந்தது. லோடி வம்சத்தைச் சேர்ந்த தில்லி சுல்தான் இப்ராகிம் லோடி தன் நாட்டை விரிவுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் ஆப்கானியர், ரஜபுத்திரர் ஆகியோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தன. பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு இப்ராகிம் லோடியின் எதிரியான தௌலத்கான் லோடியாலும், மேவாரின் அரசனும் ரஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பின் தலைவருமான ராணா சங்காவாலும் அனுப்பப்பட்ட தூதுக்குழுக்களை பாபர் சந்தித்தார். பாபர் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தபோது, முதலில் தனக்கு உதவி செய்வதாக உறுதிகூறி பின்னர் பின்வாங்கிய தௌலத்கான் லோடியின் படைகளை லாகூரில் வென்றார்.

முதலாம் பானிப்பட் போர் (ஏப்ரல் 21, 1526) | First Battle of Panipat (21 April 1526)

இதன் பின்னர் பாபர் லேடியால் ஆளப்பட்ட பஞ்சாப்பை நோக்கித் திரும்பினார். பல படையெடுப்புகளுக்குப் பின்னர் பாபர் இப்ராகிம் லோடியின் பெரும்படையை எண்ணிக்கையில் குறைவான தனது படையைக் கொண்டு பானிப்பட்டில் தோற்கடித்தார். மிகச் சரியாகப் போர்வியூகங்கள் வகுத்துப் படைகளை நிறுத்தியமையும், பீரங்கிப் படையை (Artilery) திறம்படப் பயன்படுத்தியமையும் பாபரின் வெற்றிக்குக் காரணங்களாய் அமைந்தன. இவ்வெற்றி இந்தியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கான நம்பிக்கையை பாபருக்கு அளித்தது. தில்லியையும் ஆக்ராவையும் பாபர் கைப்பற்றினாலும் ஆப்கானியர்களையும் ரஜபுத்திரர்களையும் அடக்க வேண்டிய அவசியமிருந்தது.

கான்வா போர் (1527) | Battle of Khanwa (1527)

அடுத்தபடியாக பாபர் மேவாரின் அரசனும் ராஜஸ்தான் மாளவம் ஆகிய பகுதிகளில் பெரும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்த சித்தூரின் ராணா சங்காவை போர்க்களத்தில் எதிர்கொள்ளத் தீர்மானித்தார். தவிர்க்கமுடியாத அம்மோதலுக்குச் சாதகமான களமாக ஆக்ராவுக்கு அருகேயுள்ள கான்வா என்னுமிடத்தைத் தேர்வு செய்தார். தன்னுடைய அச்சமூட்டக் கூடி. பெரும்படையோடும் அதற்கு வலுச்சேர்த்த ஆப்கன் முஸ்லீம்கள், இப்ராகிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி ஆகியோரின் உதவியோடு ஆவேசமாக அணிவகுத்து வந்த ராணா சங்காவின் படைகள் பாபரின் படைகளை எதிர்கொண்டன. மீண்டும் ராணுவ தந்திரத்தாலும், பீரங்கிப்படைகளைத் திறம்பட பயன்படுத்தியதாலும் பாபர் ராணா சங்காவின் படைகளைத் தோற்கடித்தார். இவ்வெற்றியைத் தொடர்ந்து குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகள் கைப்பற்றப்பட்டன. இது பாபரின் நிலைக்கு மேலும் வலுவூட்டியது.

சந்தேரிப் போர் (1528) | Battle of Chanderi (1528)

அடுத்து சிறப்பு வாய்ந்த மாளவப் பகுதியின் மீது பாபரின் மேலாதிக்கத்தை உறுதி செய்தது சந்தேரியில் மேதினிராய் என்பவருக்கு எதிராகச் செய்யப்பட்ட போராகும். இவ்வெற்றியைத் தொடர்ந்து பாபர் ஆப்கானியரின் வளர்ந்துவரும் கிளர்ச்சி நடவடிக்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.

காக்ரா போர் (1529) | Battle of Ghagra (1529)

ஆப்கானியர்களுக்கு எதிராக பாபர் மேற்கொண்ட இறுதிப்போர் இதுவாகும். சுல்தான் இப்ராகிம் லோடியின் சகோதரனான முகம்மது லோடியும் அவரது மருமகனான சுல்தான் நஸ்ரக்ஷஷாவும் பாபருக்கு எதிராகச் சதி செய்தனர். ஆபத்தை உணர்ந்த பாபர் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்தார். கங்கை நதியின் துணை நதியான காக்ரா ஆற்றின் கரையில் இறுதியாக நடைபெற்ற போரில் பாபர் ஆப்கானியரைக் கோற்கடித்தார். ஆனால் ஆக்ராவிலிருந்து திரும்பி லாகூர் செல்லும் வழியில் பாபர் 1530இல் காலமானார்.

பாபரைப் பற்றிய மதிப்பீடு | Estimate of Babur

முகலாயப் பேரரசை நிறுவிய பாபர் பாரசீக அராபிய மொழிகளில் புலமை பெற்றவராவார். தனது வாழ்க்கையைப் பற்றிய பாபரின் நினைவுக் குறிப்புகளான துகக்-இ-பாபுரி (பாபர் நாமா) உலகச் செவ்வியல் இலக்கியமாகக் கருதப்படுகிறது. ஒரு சில காலம் இந்தியாவை ஆண்ட ஆப்கானியரைப் பற்றியோ அல்லது அவர்களால் ஆளப்பட்ட பெரும்பான்மை மக்களைப் பற்றியோ வியந்து பாரட்டும் அளவிற்கு பாபர் எதையும் பார்க்கவில்லை. ஆனால் இந்தியாவைப் பற்றிய அவருடைய சில கருத்துக்கள் சுவாரசியமாக உள்ளன.

இந்தியா எதைப் பெற்றிருந்தது என்பதை பாபர் பின்வருமாறு விவரிக்கிறார்: இந்துஸ்தானத்தின் தலையாய் மேன்மை எதுவெனில் இது ஒரு மிகப் பெரிய நாடு. பெருமளவிலான தங்கத்தையும் வெள்ளியையும் கொண்டுள்ளது. இந்துஸ்தானத்தின் மற்றொரு வசதி யாதெனில் இங்குள்ள தொழிலாளர்கள், ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு பிரிவுக்கும் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் முடிவே இல்லாத வகையில் கடுமையாக உழைத்தனர்.

காந்தகாரில் எல்லை வரையிலான தொடங்கி வங்காளத்தின் பாபளுக்குச் சொந்தமான பகுதிகள் தற்போது பாதுகாப்பாய் இருந்தன. இருந்தபோதிலும் ராஜபுத்திரர்களின் விரிந்து பரந்த பாலைவனப் பகுதிகளிலும் ராந்தம்பூர், குவாலியர், சந்தேரி ஆகியவற்றிலும், ரஜபுத்திரத் களிட்டுக் தலைவர்கள் தங்களிடையே சண்டை கொண்டிருந்ததால் ஒழுங்குபடுத்தப்பட்ட நிர்வாகம் என்பதில்லை. பாபர் தனது மகன் ஹூமோயூனுக்கு இடர்பாடுகள் நிறைந்த பணியை விட்டுச் சென்றார்.

முகலாயப் பேரரசர் ஹூமாயூன் (1530 – 1540; 1555 – 1556) 

ஹூமாயூன் பண்பாடும் கல்வியறிவும் மிக்கவர். ஆனால் தனது தந்தையைப் போல் பெரும் வீரர் அல்ல. பலவீனமான பொருளாதார முறை, கொள்ளையடிக்கும் இயல்புடைய ஆப்கானியர், ஆகிய இரண்டு சிக்கல்களை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. குஜராத் அரசரான பகதூர்ஷா அச்சத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். காபூல், காந்தகார் பகுதிகளுக்குப் பொறுப்பு வகித்த ஹூமாயூனின் சகோதரர் கம்ரான் தன்னுடைய அதிகாரத்தைப் பஞ்சாப் வரை நீட்டித்தார். பாபர் மரணமுறும் தருவாயில் சகோதரர்களை அன்புடன் நடத்துவேன் என பாபருக்குக் கொடுத்த சத்தியவாக்கை நினைவில் நிறுத்திய ஹூமாயூன் பஞ்சாப் மீதான கம்ரானின் ஆட்சியதிகாரத்தை ஓர் உள்நாட்டுப் போரைத் தவிர்ப்பதற்காக ஏற்றுக்கொண்டார்.

பீகார், உத்திரப்பிரதேசம் ஆகியவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷெர்கான் (பின்னர் ஷெர்ஷா) என்பவரின் தலைமையில் வளர்ந்துவரும் ஆப்கானியரின் அதிகாரம், அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள ஹூமாயூனைத்

தூண்டின. 1532இல் தௌரா என்னுமிடத்தில் ஆப்கானியரைத் தோற்கடித்த ஹூமாயூன், பலம் வாய்ந்த சுனார் கோட்டையை முற்றுகையிட்டா ர். நான்கு மாதங்களுக்குப் பின்னர் முகலாயருக்கு விசுவாசமாக இருப்பேன் எனப் பொய்யாக வாக்குறுதியளித்த ஷெர்ஷாவின் வார்த்தைகளை நம்பி ஹூமாயூன் முற்றுகையைக் கைவிட்டார். ஹூமாயூன் எடுத்த இந்த தவறான முடிவு அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது.

பின்னர் வந்த ஆண்டுகளில் அவருடைய எதிரிகள் தங்களை வலிமைப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், இவர் தில்லியில் ‘தீன்பனா’ என்னும் புதிய நகரை உருவாக்குவதில் கழித்தார். இதே சமயத்தில் பகதூர்ஷா ராஜஸ்தானைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டதோடு முகலாயர்களுக்கு எதிரானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களைத் தூண்டியும் விட்டார். வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்த ஹூமாயூன், பகதூர்ஷாவின் மேல் போர் தொடுத்து குஜராத்தையும் மாளவத்தையும் கைப்பற்றி அவற்றை தனது சகோதரரான அஸ்காரியின் பொறுப்பில் விட்டார். குஜராத் மக்களின் கலகங்களை அடக்க இயலாத நிலையில் அஸ்காரி ஆக்ரா செல்லத் தீர்மானித்தார். அஸ்காரி ஆக்ராவைக் கைப்பற்றி தனதாக்கிக் கொள்வார் என்ற அச்சத்தில் மாண்டுவில் தங்கியிருந்த ஹூமாயூன் குஜராத்தையும் மாளவத்தையும் கைவிட்டுவிட்டுப் படைகளோடு சகோதரரைப் பின் பின்தொடர்ந்தார். ராஜஸ்தானில் சந்தித்துக்கொண்ட சகோதரர்கள் இருவரும் சமாதானமாயினர்.

பகதூர்ஷா தொடர்பான போர் நிகழ்வுகளில் ஹூமாயூன், முழுமையாக ஈடுபட்டிருந்த வேளையில் ஷெர்கா ன் வங்காள ஆட்சியாளரைத் தோற்கடித்து தன்னை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். வங்காளத்திலுள்ள கோட்டையும், ரோக்தா கோட்டையும் அவரால் கைப்பற்றப்பட்டன. சுனார் கோட்டையைக் கைப்பற்றிய ஹூமாயூன் ஷெர்கானை எதிர் கொள்வதற்காக வங்காளம் நோக்கிப் புறப்பட்டார். இடையே கவுர் அல்லது கௌடா என்ற இடத்தை ஹூமாயூன் அடைந்தபோது அவருடைய மற்றொரு சகோதரரான ஹிண்டால் கிளர்ச்சி செய்வதாக தகவல் வந்த து. ஆகவே ஹூமாயூன் அதை அடக்குவதற்காக ஆக்ரா நோக்கிப் புறப்பட்டார். அதுவரையிலும் அமைதி காத்த ஷெர்கான் இப்போது ஹூமாயூனின் படைகளைத் தாக்கத் தொடங்கினார். மிகப்பெரும் இடர்பாடுகளுக்குப் பின்னர் ஹூமாயூன் சௌசா என்னுமிடத்தை அடைந்தபோது ஒரு முழுமையான போரே ஏற்பட்டது.

சௌசாப் போர் (1539)

ஷெர்கான் தனது மேலான, அரசியல், ராணுவத் திறமைகளால் இப்போரில் வெற்றி பெற்றார். ஹூமாயூன் பெருந்தோல்வியைச் சந்தித்தார். இப்போரில் 7000 முகலாயப் பிரபுக்களும் வீரர்களும் கொல்லப்பட்டனர். தன்னுயிரைக் காத்துக் கொள்ளத் தப்பியோடிய ஹூமாயூன் கங்கை நதியை நீந்திக் கடந்தார். ஆக்ராவை சென்றடைந்த அவர் சகோதரர்கள் அஸ்காரி, ஹிண்டால் ஆகியோரின் உதவியோடு ஷெர்கானை எதிர் கொள்ள படையொன்றைத் திரட்டினார். இறுதி மோதல் கன்னோசியில் நடைபெற்றது.

கன்னோசி போர் (1540)

கன்னோசி போரில் ஹூமாயூனின் படைகள் முற்றிலுமாகத் தோற்கடிக்கப்பட்டன. அவர் நாடற்ற அரசரானார்.

முகலாயப் பேரரசு முடிவுரை | Mughal Empire Conclusion

போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது, இக்கட்டுரை TNPSC GROUP 4, GROUP 2 & 2A, GROUP 1 க்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து 2 அல்லது 3 கேள்விகள் கேட்கப்படும்.

Mugalayarkal One Liner PDF DOWNLOAD



No comments:

Post a Comment